Friday, July 18, 2014

பரந்தாமனின் (சு)வாசம்- ஒரு ராதையின் தேடல்-பகுதி-3

தொடர்ந்து கிருபா பற்றி வைஸ்னவி அக்கா சொல்லத்தொடங்கினார்

நான் வணக்கும் என் தெய்வத்திற்கு சேவை புரியும் புனிதமான தொண்டு செய்யும் அவரிடம் என் பெண் மனம் தொலைந்து போய்விட்டது.

என் சுவாசங்களை களவாடிக்கொண்டு போய்விட்டான் என் கண்ணாளன்.
அந்த பத்து நாட்களும் கிருஸ்னை நினைத்து உருகிய மீராவாக என் மனம் உருகியது அவருக்காக.பத்துநாட்கள் கடந்துபோய்விட்டது.திருவிழாமுடிந்து அவர் போய்விட்டார்.மீண்டும் எப்போது அவரை பார்ப்பேன் என்று மனம் தினத்தந்தி அடித்தது.இரவுகளில் என் பெண்மையை களவாடும் கள்வனாகவும் பகலில் என் மனசை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனாகவும் கனவுகளில் என்னை சுவீகரித்துக்கொண்டு இருந்தார் அவர்

முன்னூற்று ஜம்பத்தி ஜந்து நாட்கள் தவத்தின் பின் மீண்டும் அடுத்தவருடம் அதே திருவிழாவில் அவரை பார்த்தேன். இம்முறை அவரிடம் பேசவேண்டும் என்று தோன்றியது.அருகே சென்றேன் ஆனால் அவர் முகத்தை பார்ததும் மனம் தைரியம் இழந்து அவரில் தொலைந்து போய்விடும்.


அந்த மனுசனில் அப்படி என்ன சக்தியிருக்கு என்று தெரியவில்லை ராம் .
ஆனால் எங்கோ பூர்வஜென்மத்தில் அவருடன் வாழ்ததாக ஒரு உணர்வு.எனக்கும் அவருக்கும் இந்த பிரபஞ்சத்தில் முன் ஜென்மத்தில் ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கின்றது.அதை அவரை பார்க்கின்ற நொடிகளில் எல்லாம் என்னால் உணரமுடியும்.அவரும் உணருகின்றாரா என்று கேட்கவேண்டும் என்று தோன்றும் ஆனால் அவரை பார்க்கும் நொடிகளில் எல்லாம் என்னை பேச சக்தியற்ற மடந்தையாக மாற்றிவிடும் அவரது பார்வைகள்.

வைஸ்னவி அக்கா சொல்லச்சொல்ல எனக்கு அந்த மனிதன் மேல் சற்று பொறாமையாக இருந்தது.இப்படி ஒரு பெண் உருகும் அளவுக்கு அவரில் இருக்கும் அந்த சக்தி என்ன என்று அறிய ஆவலாக இருந்தது.



சரி அக்கா அவர் இப்ப எங்க இருககார்.எந்த ஊர்?

அது எல்லாம் தெரியாது ராம்.ஒவ்வொறு வருடமும் அந்த கோவில் திருவிழாவில் தான் பார்ப்பேன் கடந்த ஜந்து வருடங்களாக என் தவம் இது.ஆனால் என்னால் அவருடன் பேசமுடியவில்லை இந்த முறை திருவிழாவில் அவசியம் பேசவேண்டும் ஆனால் அதற்கு முன் நான் வெளிநாடு போய்விடுவேன் அதற்குத்தான் இங்கே மொழிக்கல்வியை படிக்கின்றேன் எனவே நான் போகமுன் அவரை சந்தித்து என் மனம் அவரை நினைத்ததை, எனக்கும் அவருக்கும் பூர்வஜென்மத்தில் ஏதோ ஒரு பந்தம் இருந்ததாக நான் உணரும் உணர்வை அவரும் உணர்ந்துகொண்டாரா? என்று அறியவேண்டும் என் மனசில் உள்ளதை நான் அவரிடம் சொல்லவேண்டும் அப்போதுதான் என் இந்த ஜென்மம் பூரணப்படும்

சரி அவரது சொந்த ஊர் எது?

அது தெரியாது அவர் பெயர் கூட கிருபா என்பது அவருடன் வந்தவர்கள் அழைக்கும் போதுதான் தெரியும்.முழுப்பெயர் தெரியாது. ஆனால் அவர் இங்கே அருகே தான் இருக்கின்றார். நம் கல்லூரிக்கு அருகேதான் இருக்கின்றார் என்று என் உள்மனம் சொல்லுகின்றது.

அவர் சுவாசிக்கும் காற்றை நானும் சுவாசிக்கின்றேன் என்று என்னால் உணரமுடிகின்றது ப்ளீஸ் ராம் நீங்கள் தான் எப்படியாவது அவர் பற்றிய தகவல்களை கண்டு பிடித்து தவறவேண்டும்.......ஒரே மூச்சில் வைஸ்னவி அக்கா சொல்லிமுடித்தார்.


அவருக்கு மிக அருகில் நான் அமர்ந்து இருந்தபடியால் என்னால் அவரது முக பாவனையை நன்றாக கவனிக்கமுடிந்தது.அழகான அவர் முகம் நாணம்,காதல்,ஏக்கம்,ஏமாற்றம்,தேடல் என்று பல உணர்வுகள் ஒருசேர சிவந்துவிட்டது. அவர் கண்களில் ஒரு வித ஏக்கம் கலந்த காந்த சக்தியை வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது .அந்த கண்களை என்னால் சந்திக்க முடியவில்லை பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.

இப்போது என் மனம் கிருபாவை எப்படி கண்டு பிடிப்பது என்று சிந்திக்க தொடங்கியது.ஒருவரின் பெயர் தெரியாது ஊர் தெரியாது.அதுவும் அவர் ஒரு ஜயர்.நண்பர்கள் அழைக்கும் கிருபா இதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை தேடுவது என்பது சற்று கடினமான காரியம் தான்.ஆனால் முடியாது என்று எதுவும் இல்லை.ஆனால் எனக்கு சில விடயங்களை மனசை போட்டுக்குழப்பிக்கொண்டு இருந்தது.அதை வைஸ்னவி அக்காவிடமே கேட்டுவிட்டேன்

சரி அக்கா நான் கண்டுபிடித்து தருகின்றேன் ஆனால் சில விடயங்களை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

என்ன சொல்லுங்க ராம்

இல்லை அவர் பற்றி உங்களுக்கு பெரிதாக தெரியாது ஒருவேளை அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் என்ன செய்வீங்க?

இல்லை அப்படி ஆகியிருக்காது என்று நினைக்கின்றேன் அப்படி ஆகியிருந்தாலும் ஒன்றும் பிரச்சனையில்லை எனக்கு.அவர் மேல் வந்த காதலை நான் அவரிடம் சொல்லவேண்டும் அவ்வளவுதான்.மற்றும் படி அவர் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றுதான் நான் நினைப்பேன்.எனவே அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை நான் என் காதலை அவரிடம் சொன்னால் சரி வேறு ஒன்றும் தேவையில்லை எனக்கு.

சரி பட் இதில் இன்னும் ஒரு விடயம் இருக்கு கேட்கலாமா அக்கா

கேளுங்க ராம்

இல்லை பொதுவாக இந்தக்காலத்தில் சுமாராக ஒரு பொண்ணு தங்களை ரூட்டு விட்டாளே அவளை கரைக்ட் பண்ணத்தான் பசங்க நினைப்பாங்க.ஆனால் நீங்கள் வேறு சூப்பர் பிகராக இருக்கீங்க.....

டேய் என்ன................. என்று என்னையை குறும்பாக பார்த்தார்

இல்லை உண்மையைத்தான் சொல்லுறேன் நீங்க வேறு அழகாக இருக்கீங்க

சரி அதுக்கு என்ன சொல்லுங்க பாஸ்

இல்லை உங்களை மாதிரி ஒரு அழகான பொண்ணு தன்னை விரும்புவதாக தெரிந்தால் அவர் உங்களை ரை பண்ணினால் என்ன செய்வீங்க?

புரியல ராம் என்ன சொல்லுறீங்க நீங்க என்ன சொல்லவாறீங்கனு புரியல
என்று வைஸ்னவி அக்கா என்னிடம் கேட்டார்.

நான் மனசில் நினைச்சிக்கொண்டேன் உண்மையாவே புரியலையா இல்லை புரியாதது மாதிரி பேசுறாங்களே பொதுவாகவே பெண்களின் குணம் இதுதானே

என்ன ராம் யோசனை

இல்லை அக்கா ஒரு வேளை அவருக்கு கல்யாணம் ஆகியிருந்து.உங்களை மாதிரி அழகான ஒரு பெண் அவரை லவ் பண்ணுறாள் என்று தெரிந்து உங்கள் காதலை அவர் தப்பான எண்ணத்துடன் பார்த்து உங்களிடம் வேறு விடயத்துக்கு முயற்சி செய்தால் என்ன செய்வீங்க? என்றேன்

ஆமால்ல அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கு என்ன ராம். நான் அது பற்றி யோசிக்கவேயில்லை என்று நான் சொல்லவந்த விடயத்தை புரிந்தவராக 

ஆமாம் அக்கா நிச்சயம் அவர் அப்படி உங்களை யோசிக்கவும் வாய்பு இருக்கு   என்றேன்

அப்படி அவர் யோசிக்கமாட்டார் என்று என் மனசு சொல்லுது ராம்
ஒருவேளை அவர் அப்படி யோசித்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.அது அவரின் வக்கிர புத்தி ஆனால் எனக்கு அவர் மேல் தவறான எந்த உணர்வும் இல்லை. மனம் முழுக்க அவர் மேல் அன்புதான் நிறைந்திருக்கு ராம். அந்த அன்பை அவரிடம் சொல்லவேண்டும் அதுதான் என் எதிர்ப்பார்பு.அவர் மேல் எனக்கு வந்த காதலை சொன்னால் மட்டும் போதும் எனக்கு.சந்தோசமாக என் இந்த ஜென்மம் புனிதப்படும்.

ஒக்கே அக்கா உங்களின் இந்த தெளிவுதான் எனக்கு வேண்டும் காரணம் உங்கள் வாழ்கை நாசமாகப்போய்விடக்கூடாது என்பதில் உங்களைவிட நான் தெளிவாக இருக்கின்றேன் அதுதான் சில விடயங்களை ஒப்பினாக கேட்டேன் தப்பா இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக நான் கண்டுபிடித்து தருகின்றேன்.

நன்றி ராம் இதை மட்டும் செய்தீர்கள் என் உயிர் உள்ளவரை நான் உங்களை மறக்கமாட்டேன்.காலத்துக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவளாக இருப்பேன்.
பதிலுக்கு உங்களுக்கு என்ன உதவி வேணும் என்றாலும் செய்யுறன்

ஜயோ நான் எதையும் எதிர்பார்த்து உங்களுக்கு உதவ முன்வரவில்லை அக்கா.என்னால் உங்களை உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடிகின்றது எனவே நிச்சயம் அவர் பற்றிய விபரங்களை கண்டு பிடித்து தருவேன் என்னை நூறுவீதம் நம்பலாம்.

வைஸ்னவி அக்காவின் கதையை கேட்டதில் இருந்து எனக்கு சில நாட்கள் தூக்கம் இல்லை எப்படியாவது அவரது தேடலை முற்றுப்பெறவைக்க வேண்டும் கிருபாவை பற்றிய தகவல்களை கண்டுபிடித்து அவருக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எனக்கு கிருபா என்ற அந்த மனிதன் மேல் சற்று பொறாமையாக இருந்தது ஒரு பெண்ணால் இப்படி நேசிக்கப்படும் அவர் நிச்சயம் முற்பிறப்பில் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்.இந்த உலகத்தில் மிகச்சிறந்த அதிஸ்டசாலியும் அவர்தான் மிகவும் துரதிஸ்டசாலியும் அவர்தான் பிறகு இப்படி ஒரு தேவதையினால் நேசிக்கப்படுகின்றார் எனவே அதிஸ்டசாலிதானே ஆனால் அதே நேரம் அது அவருக்கு தெரியவில்லையே அந்த வகையில் மிகப்பெரும் துரதிஸ்டசாலி அவர்.

அன்புக்காக ஏங்கிக்கொண்டு இருக்கும் என் மனம் நினைத்துக்கொண்டது இப்படி ஒரு பெண் என்னை அளவு கடந்து நேசித்தால் எப்படியிருக்கும்.அந்த கிருபா நானாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கூட ஒரு நொடி யோசித்துப்பார்தேன் அந்தளவு என்னை அந்த மனிதன் கவர்ந்துவிட்டான்.பிறகு இந்த உலகில் விலைமதிப்பில்லாத செல்வம் அன்புதான்.அதுவும் தேவதைகளின் அன்பை,நேசிப்பை பெறுபவர்கள் பாக்கியசாலிகள் அந்த கிருபா மிகவும் பாக்கியசாலி. எனவே அந்த மனிதனை நானும் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

இதற்கு இடையில் எனக்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வந்தது என்று சொன்னேன் அல்லவா? அவளுக்கு நான் வைஸ்னவி அக்காவிடம் நெருங்கிப்பழகுவது பிடிக்கவில்லை அவள் எமது உறவை கொச்சைப்படுத்தி பேசத்தொடங்கினாள்.உனக்கு என்ன வைஸ்னவி அக்கா கூட கதைவேண்டி கிடக்கு என்றாள்

நான் சொன்னேன் அவங்க எனக்கு அக்கா மாதிரி என்று

அதற்கும் அவள் ஒரு பதில் வைத்திருந்தாள் சும்மாதான் நீ அக்கா என்று கூப்பிடுற ஆனால் உனக்கு அவங்களுக்கும் ஒரே வயதுதானே பிறகு என்ன என்று

.நான் எவ்வளவு சொல்லியும் அவள் எங்கள் உறவை புரிந்துகொள்ளவில்லை அவள் பார்வையில் நாங்கள் தப்பானவர்கள். எனக்கு வைஸ்னவி அக்காவுக்கும் தப்பான உறவு இருக்கு என்ற இந்த எண்ணம் அவளிடம் இருந்து மாறவேயில்லை இறுதிவரை மாறவேயில்லை என்பதுதான் கவலையான விடயம்.

ஒரு நாள் வைஸ்னவி அக்காவிடம் கேட்டு இருக்காள் போல ராமும் நீங்களும் என்ன நீண்ட நேரம் கதைத்துக்கொண்டு இருக்கீங்க என்று.அவள் அப்படி கேட்டதற்கு காரணம் இருக்கு வகுப்பு முடிந்ததும் ஒவ்வொறு நாளும் வைஸ்னவி அக்காவும் நானும் ஒரு மணித்தியாளங்கள் கல்லூரியில் இருந்து கதைத்துவிட்டுத்தான் போவோம் காரணம் வைஸ்னவி அக்கா இருக்கும் இடத்திற்கு போகும் பஸ் சரியாக 1 மணிக்குத்தான் வரும் எங்களுக்கு 12 மணிக்கு எல்லாம் கிளாஸ்முடிந்துவிடும் எனவே அந்த ஒரு மணித்தியாளங்கள் வைஸ்னவி அக்காவும் நானும் கதைத்துக்கொண்டு இருப்போம் எனவேதான் அவள் வைஸ்னவி அக்காவிடம் அப்படி கேட்டு இருகாள்.இதுல என்ன நகைச்சுவை என்றால் காலையில் 9மணிக்கு க்ளாஸ் தொடங்க முன் நான் காதலித்தவளுடன் ஒரு மணித்தியாளம் கதைத்துக்கொண்டு இருப்பேன்.க்ளாஸ் முடிய வைஸ்னவி அக்காவிடம் கதைத்துக்கொண்டு இருப்பேன் பார்பவர்கள் எல்லோறுக்கும் என்னில் கடுப்பு இவன் என்ன இரண்டு பொண்ணுங்களை உஷார் பண்ணிவிட்டான் போல என்று என்னத்தை சொல்ல சரி விடயத்துக்கு வருவோம்

நான் ஏற்கனவே வைஸ்னவி அக்காவிடம் இவள் பற்றி சொல்லியிருக்கேன் என்னையும் உங்களையும் இவள் சந்தேகிக்கின்றாள் என்று.எனவே வைஸ்னவி அக்கா உண்மையை சொல்லியிருக்கார் இப்படி ஒருவர் மேல் எனக்கு ஈர்ப்பு வந்திருக்கு அவர் பற்றி எதுவும் தெரியாது அதைத்தான் ராம் தேடித்தருவதாக சொல்லியிருக்கான் என்று .

அவ்வளவுதான் அவள் என்னிடம் வந்து சண்டைபோட்டாள். உனக்கு ஏன் ராம் தேவையில்லாத வேலை? வைஸ்னவி அக்கா யாரை பார்த்து பீல்பண்ணினால் உனக்கு என்ன? நீ ஏன் அவனை எல்லாம் கண்டு பிடித்து கொடுக்கின்றாய் அப்படி இப்படி என்று காட்டுக்கத்து கத்தினாள்

எனக்கு சிரிப்புத்தான் வந்தது காரணம்.அவளும் நானும் இந்த ஜென்மத்தில் சேரமுடியாத அளவுக்கு விதி எழுதிவைத்துவிட்டது.எனவே நான் யாருடன் பேசினால் இல்லை யாரையும் கண்டுபிடித்து கொடுத்தால் இவளுக்கு என்ன என்று மனம் நினைத்துக்கொண்டது.ஆனால் அதை அவளிடம் கேட்க தைரியம் இல்லை.

நான் காதலித்தவள் தெளிவாக சொல்லிவிட்டாள் ராம் உனக்கு தேவையில்லாத வேலை.மவனே அவனை கண்டுபிடிக்கின்றேன் இவனை கண்டு பிடிக்கின்றேன் என்று போனாய் துலைச்சுப்போடுவன் என்று சொல்லிவிட்டாள்.

ஆனால் நானோ வைஸ்னவி அக்காவிற்கு கிருபா பற்றி கண்டுபிடித்துக் கொண்டுக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.எனவே யார் என்ன சொன்னாலும் கிருபாவை கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என்று அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.

இதில் உள்ள பிரதான பிரச்சனை எனக்கு அழகாபுரி பற்றி முழுவதும் தெரியாது நான் இந்த மொழிப்பயிற்சியை பெறுவதற்காகத்தான் இங்கே வந்திருக்கின்றேன்.இங்குள்ள இடங்கள் ஏதும் பெரிதாக தெரியாது.எனவே எப்படி அவரை கண்டுபிடிக்கமுடியும் என்பது என் முன்பு இருக்கும் பெரிய சவால்.

அதைவிட நாட்டு நிலைமைகள் கொஞ்சம் சரியில்லாத படியால் ஒருவர் பற்றி விசாரித்தால் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.ஆனாலும்  ரிஸ்க் எடுக்க நான் தயார் ஆனேன்.

முதல் கட்டமாக எனக்கு தெரிந்த சில நண்பர்கள் மூலமாக விசாரிக்க சொன்னேன்.அப்படித்தான் என் நண்பன் ஒருவன் அழகாபுரியில் ஒரு இடத்தில் கிருபா பற்றி விசாரித்துக்கொண்டு போகும் போது யாரோ போலிஸ்க்கு சொல்லிவிட்டார்கள் இப்படி ஒருவர் ஒருவர் பற்றி விசாரிக்கின்றார் என்று.கடைசியில் அது சி.ஜ.டி விசாரனையாகிவிட்டது எதற்காக ஒருவரை விசாரித்தீர்கள் என்று என் நண்பனை விசாரிக்க அவன் என்னை சொல்லியிருக்கின்றான் ராம் தான் விசாரிக்க சொன்னான் என்று எனக்கு விசாரனைக்காக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது

எதற்காக கிருபா என்ற நபர் பற்றி விசாரித்தோம் என்று சொல்லமுடியாது காரணம் வைஸ்னவி அக்காவிற்கு தேவையில்லாத பிரச்சனைகள் மனக்கஸ்டங்கள் வரும். எனவே என்ன நடந்தாலும் உண்மையை சொல்லக்கூடாது ஏதாவது காரணங்கள் சொல்லி சமாளிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டே விசாரனைக்காக வரச்சொன்ன இடத்திற்கு போனேன்
(தொடரும்)



Post Comment

1 comments:

Unknown said...

///காதலி த்தவள்/க்கிறவள் தெளிவாக சொல்லி விட்டாள்................................. துலைச்சுப்பிடுவேன்.////ஹி!ஹி!!ஹீ!!!///நன்றாகப் போகிறது.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails