Saturday, February 09, 2013

இதயம் பேசுகின்றது

”ஹாய்”

வணக்கம்

நான் ராஜ்

ராஜ்னா ராஜ் தான் வேறு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை

இந்த உலகிற்கு நான் வந்து இன்றுடன் இருபத்தி மூன்று வருடங்கள் ஒடிவிட்டது.ஆம் இன்று எனக்கு பிறந்தநாள்.இந்த இருபத்து மூன்று வருடங்கள் என்ன சாதித்தேன் என்றால் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை ஆனால் ஏதோ தாகம் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று ஆனால் எப்படி என்று தெரியவில்லை.நான் கடந்து வந்த இந்த இருபத்து மூன்று வருட வாழ்க்கை பயணம் கடுமையானது வழிகள் எங்கும் பூக்கள் தூவியிருக்கவில்லை  இலகுவாக எதுவும் இருக்கவும் இல்லை


கரடு முரடுகள் நிறைந்த இந்த பாதையில் இருபத்தி மூன்றுவருடங்கள் ஒடிவந்துவிட்டேன்.நேற்று முதலாம் ஆண்டு படிக்க பாடசாலைக்கு போனது போல இருக்கு ஆனால் நிஜம் பாடசாலை கல்வியை நான் முடித்து ஏழுவருடங்கள் ஓடிவிட்டது.

திரும்பி பார்பதற்கு இடையில் மறைந்துவிடும் மனித வாழ்க்கை. ஏதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டேயிருக்கின்றோம் அது பலருக்கு கிடைப்பதற்கு முன்பே வாழ்க்கை பயணம்  முடிந்துவிடுகின்றது.இலட்சியங்கள் கனவுகள் அதிகம் ஆனால் வாழ்க்கைகாலம் குறைவு இதுதான் சராசரி மனித வாழ்க்கை.

இந்த இருபத்தி மூன்று வருடத்தில் இரண்டு மூன்று ஆண்டுகள் என் வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள் நானே மறக்க நினைக்கின்ற பக்கங்கள் அவைகளை மீண்டும் ஞாபகம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை எனவே அதை தவிர்த்துவிட்டு பயணிப்போம்.

சமர் படத்தில் ஒரு வசனம் வரும் வாழ்க்கை சிலருக்கு வரம் சிலருக்கு சாபம்,சிலருக்கு யுத்தம்.என்னை பொறுத்தவரை வாழ்க்கை எனக்கும் ஒரு யுத்தம்தான்

வெருமனே தன் நம்பிக்கை என்றும் ஆயுதத்தை மட்டும் வைத்து வாழ்க்கையுடன் எவ்வளவு காலம் தான் யுத்தம் செய்வது?

இறைவன் ஒரு விசித்திரமான படைப்பாளி அவனது நாடகத்தில் நாம் எல்லோறும் நடிகர்கள்.நமக்கான பாத்திரத்தை சிறப்பாக செய்ய நினைத்தாலும் அதை கடினமாகவே ஆக்கிக்கொண்டு இருப்பான் கடவுள்.
ஆனால் அதையும் தாண்டி நாம் சிறப்பாக செய்யும் போது அடுத்த சோதனையை தருவதற்கு காத்திருப்பான் அந்த விசித்திர படைப்பாளி.

அந்த விசித்திரமான படைப்பாளி எனக்கு இதுவரை வழங்கிய பாத்திரங்கள் பற்றி பேசுவோம்.

இந்த வாழ்க்கையில் எனக்கு இதுவரை புரியாத விடயங்கள் நிறைய இருக்கின்றன அதுல ஒன்று காதல்.அப்பா மேட்டருக்கு வந்துட்டான் என்று நினைக்கிறீங்களா

பெரும்பாலும் எல்லோறுக்கும் காதல் பிடிக்கும் காதலிக்காதவங்களுக்கும் காதல் பிடிக்கும்.அதுதான் ஆரம்பத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமாக பேசுவோம் என்பதற்காக காதலை பற்றி ஆரம்பித்தேன்.

நான் காதலிச்ச பொண்ணுங்கள் என்னை காதலிக்கவில்லை என்னை காதலித்த பொண்ணுங்களை நான் காதலிக்கவில்லை.  நான் கடந்து வந்த பாதையில் நிறைய காதல்கள் என்னைக்கடந்து போயிருக்கின்றன.இதுதான் காதலுக்கும் எனக்குமான தொடர்பு.

காதலுக்கு பலர் பல வகைகளில் வரவிலக்கனம் கொடுத்திருக்கின்றார்கள் சிலர் வரவிலக்கனங்களை தாண்டியது காதல். அதை இவ்வளவுதான் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாது என்று சொல்வார்கள் ஆனால் என்னைக்கேட்டால்.

ஒருவரின் செயற்பாடுகளினால் நாம் ஈர்க்கப்படுக்கின்றபோது அவர்கள் மீது ஏற்படும் அளவுக்கு அதிகமான அபிமானமே காதலாக பரிணமிக்கின்றது.அது யார் மேலும் வரலாம்.இவர் மேல்தான் வரனும் அவர் மேல்தான் வரனும் என்று இல்லை.அது யார்மேலும் வரலாம்.

அத்துடன் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, இல்லை ஒரு பெண் ஒரு ஆணையோ காதலிக்கனும் என்று ஏதும் சட்டம் இருக்கா என்ன? எல்லோறும் காதலிக்கலாம் எமக்கு பிடிச்சவிடயங்களை காதலிக்கலாம்.பிடித்த இடங்களை காதலிக்கலாம்.அந்த வகையில் நானும் காதலன் தான்.

எனக்கு பிடித்த சின்ன சின்ன விடயங்களை கூட நான் காதலிக்கின்றேன்
இயற்கையை,
நான் பிறந்த மண்ணை,
நண்பர்களை,
ரைவிங்,
கராத்தே,
கிரிக்கெட்,
சினிமா
என்று என் காதலிகள் எண்ணிக்கை அதிகம்

வெளிநாட்டில் இருக்கும் நண்பன் ஒருவனுடன் நேற்று ஸ்கைப்பில் பேசிக்கொண்டு இருந்தேன்.அப்போது அவன் கேட்டான் என்ன ராஜ் லவ் ஏதாவது செட்டானுச்சா என்று கேட்டான்.ஏண்டா என்று கேட்டேன்

இல்லை கலியாணம் கட்டுற வயசு வருக்குதுதானே நாம் எல்லாம் சின்னப் பசங்க இல்லையே அதுதான் கேட்டேன் என்றான்.

“காதலை தேடி நாம போனாலும் அது நம்மளை தேடிவந்தாலும் சேதாரம் என்னவோ நமக்குத்தான்” என்று ஒரு பஞ் டயலாக் பேசிவிட்டு அதுதானாக நடக்கனும் நடக்கிற போது பார்த்துக்கலாம் என்று சொன்னேன் அவனிடம்

எனக்கு என்று ஒருத்தி இனிமேல் பிறக்க போவது இல்லை அவள் இந்த உலகத்தில் தான் இருக்கின்றாள். என்ன இன்னும் நான் அவளை சந்திக்கவில்லை சந்திக்கும் போது கண்டிப்பாக மிஸ்பண்ணமாட்டேன் அதுவரை என் காதலை எல்லாம் சேமித்து வைத்தபடி.டாகுத்தர் விஜய் ஸ்டைலில் சொன்னா ஜ ஆம் வெயிட்டிங்

இனிமேல் காதலை பற்றி எவனாவது என்கிட்ட கேட்பீங்க?அனைவருக்கும் பதில் மேலே.

சரி காதல் பற்றி நிறைய பேசிவிட்டேன் போல வேறு விடயத்துக்கு போகலாம்
இன்று என் பிறந்தநாள் என்று சொன்னேன் தானே.பொதுவாகவே எனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் நான் பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது,
கொண்டாட விருப்பம் இல்லை என்பது எல்லாம் இல்லை சந்தர்ப்பம் அமைவது இல்லை.

சின்ன வயசில் இருந்து படிப்பிற்க்கா இல்லை வேறு தேவைகளிற்காக என்று பெரும்பாலும் நான் குடும்பத்தைவிட்டு விலகியே இருந்திருக்கின்றேன்.இதனால் என் பிறந்த நாளைக்கொண்டாட சந்தர்ப்பம் அமைந்தது இல்லை.அப்படியே வீட்டில் இருந்தாலும் கொண்டாடுவதும் இல்லை.இவ்வளவு ஏன் என் பிறந்த நாள் குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்டால் கூட இல்லை என்றுதான் சொல்லனும்.அது அவர்கள் தவறு இல்லை காரணம் ஒவ்வொறுவரும் ஒவ்வொறு திசையில்.எல்லோறும் பிசி.

பெரும்பாலும் நண்பர்களே என் உலகம்.இரவு 12.30 மணிக்கு முழிச்சிருந்து எனக்கு போன் பண்ணும் நண்பன் ஆனால் என் பிறந்தநாளை ஞாபகம் இல்லாமல் இருக்கும் குடும்பம்.இதுதான் என் வாழ்க்கை.

இன்றும் அப்படியே நண்பன் ஒருவன் 12.30க்கு போன் பண்ணியிருக்கான் நான் நல்ல நித்திரை என்பதால் கவனிக்கவில்லை காலையில் தான் பார்த்தேன்.சாரிடா உன் அன்புக்கு நன்றி.அதற்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்கு நண்பர்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் தான் என் தளத்துக்கு கூட நண்பர்கள் என்று பெயரை வைத்தேன்.

பதிவுலகமும்,பேஸ்புக்கும் எனக்கு தந்த நண்பர்கள் பலர்.நண்பர்கள் என்பதை தாண்டி அக்கா என்றும்,மாமா என்றும் அண்ணா,மச்சான் சார் என்று மச்சி என்றும் முகம் பார்க்காவிட்டாலும் உரிமையுடன் நான் அழைக்கும் பல உறவுகளை தந்த இணைய உலகிற்கு நன்றி.

பொதுவாகவே உறவினர்கள் என்றால் தலை தெறிக்க ஒடும் ஆள் நான்.காரணம் பெரும்பாலும் அவர்களிடம் இருப்பது சுயநலமான அன்புதான்.சுயநலம் இல்லாத அன்பை தேடி அலைந்துகொண்டு இருக்கும் ஏதிலி நான்.

எனக்கு அம்மவை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரிடம் இருந்து நான் விலகியே  இருந்திருக்கின்றேன்.இப்ப கூட அவர் ஊரிலிருக்கின்றார். நான் வேறு இடத்தில் இருக்கின்றேன்.

அம்மாவுக்கு பிறகு சுயநலம் இல்லாத அன்பை நான் கண்டது என் அண்ணியிடம். என் ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவிதான்.ஆனால் பெற்ற மகனை போல பார்த்துக்கொள்ளும் ஜீவன்.

இன்று நான் உயிருடன் இந்த பதிவை எழுதிக்கொண்டு இருக்கின்றேன் என்றால் அண்ணாவும்,அண்ணியும் தந்த அடைக்களம் தான். அவர்கள் மட்டும் அன்று இல்லையேல் நான் இறந்து 4 வருடங்கள் ஆகியிருக்கும்.இறுதி யுத்தத்தில் தாய் தந்தையை பிரிந்து அலைந்துகொண்டு இருந்த போது மீண்டும் தாய் தந்தையை சந்திக்கும் வரை எனக்கு அடைக்களம் தந்து அன்பாக பார்த்துக்கொண்டவர்கள்.சுயநலம் இல்லாத அந்த அன்புக்கு நான்  என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

இனைய உலகிலும் முகம் தெரியாத நிறைய உறவுகளுக்கு கடமைப்பட்டுள்ளேன் உங்களின் அன்புக்கு எல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போகின்றேன் என்று எனக்கு தெரியாது. குறிப்பாக நேசன்ணா இவர் பற்றி என்ன சொல்வது எனக்கு இனைய உலகம் தந்த ஒரு சகோதரன்.உங்கள் அன்புக்கு எல்லாம் நான் என்ன செய்யப்போகின்றேன் என்று எனக்கு தெரியவில்லை அண்ணா

(தொடரும்)

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

Mahesh said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா..
நெகிழ வைத்த பதிவு நீண்ட நாலுக்கு பிரகு...

தொடருங்கள்.


தனிமரம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி இதயம் பேசுகின்றது இன்னும் பலதைப் பேசனும் என்னைத் தவிர்த்து அண்ணாக்கள் பலர் ராஜ்சுக்கு இணையத்தில் அதில் நானும் ஒருவன் என்பது இதயத்தில் இருக்கு அது போதும் தொடருங்கள் தொடரில் சந்திப்போம்.

முற்றும் அறிந்த அதிரா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜ்.

வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கிறீங்க.... இன்னும் சாதிக்க எவ்வளவோ இருக்கு...

கடந்து வந்த பாதை முட்கள் நிறைந்ததாயினும் மாத்தி யோசிச்சுப் பாருங்கோ.... கஸ்டமாக இருந்திருந்தாலும் எல்லாம் ஒரு அனுபவம்தானே? அப்படி அனுபவமும் எல்லோருக்கும் கிடைக்காதே.. உங்களுக்கு கிடைச்சதை எண்ணி பெருமைப்படுங்கோ.. நான் அப்படித்தான் சில விஷயங்களுக்கு நினைப்பதுண்டு.

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails